அக்னியாய் கொதிக்கும்
வேளை
நீண்ட நெடிய
நெடுஞ்சாலை
ஒற்றை மிதிவண்டியில்
நான் மட்டும் !
முகத்தில் அடிக்கும்
புழுதி
நீரைத் தேடும்
உதடு
கொதிக்கும் பாலையில்
நான் மட்டும் !
ஓங்கி உயர்ந்த
தென்னை வரிசை
நடுவில் சலசலக்கும்
நீரோடை
சின்னஞ்சிறிய படகில்
நான் மட்டும் !
சில் வண்டுகள்
ரீங்காரமிட
ஊசியாய் என்னுள்
குளிர்
பச்சை புற்களின்
சலசலப்பு
பறவைகளின் மெட்டு
இத்தனைக்கும் நடுவில்
நான் மட்டும் !
விண்ணை முட்ட எத்தனிக்கும்
கட்டிடங்கள்
நெருங்கி வளர்ந்த
காங்கிரீட் காடு
இங்கும்
நான் மட்டும் !
தேடுகிறேன் மனிதனை !
எங்கு நோக்கியும்
கிடைக்கவில்லை !
தேடும் நான் மட்டும்
என்ன மனிதனா ?
விடை தெரியா கேள்வி
என்னுள் !
என்னுள் விழுந்த விதை
விருட்சமாகி இன்று
தேடலாய் இறைவனிடம் !
அவனிடமும் கிடைக்கவில்லை
விடை !
எங்கு கிடைப்பான்
மனிதன் ?
யாரிடம் கிடைக்கும்
விடை ?
இதயத்தின் தேடலுக்கு
நீயாவது
விடை சொல்வாயா
வானவில்லே ?
தனிமை பற்றிய பயம் அருமை தினேஷ்
ReplyDelete